

புதுச்சேரி
தொழிலாளர் துறையில் கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
இணையதள வசதி
தொழில் நிறுவனங்களை தொடங்கவும், உரிமம் பெறவும், பதிவு செய்யவும், பதிவை புதுப்பிக்கவும் உள்ள நடைமுறைகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் சீர்திருத்த நடவடிக்கை-2021 என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அதன்படி புதுவை அரசின் தொழிலாளர் துறை புதுச்சேரி தேசிய தகவலியல் மையம் மூலம் பல்வேறு இணையதள வசதிகளை செயல்படுத்தி வருகிறது.
இந்த வசதிகளை மேலும் எளிமையாக்கும் பொருட்டு, தேசிய தகவலியல் மையம் மூலம் மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் சர்வீஸ் பிளஸ் என்ற இணையதள கட்டமைப்பு https://labour.py.gov.in வழியாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரங்கசாமி தொடங்கி வைத்தார்
இந்த இணையதள சேவையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார். அமைச்சர் சந்திரபிரியங்கா, சிவசங்கரன் எம்.எல்.ஏ., தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரேசன், துணை ஆணையர் மோகன்குமார், தலைமை தொழிற்சாலை ஆய்வார்கள் முருகையன், தொழிலாளர் அதிகாரி (அமலாக்கம்) கண்ணபிரான் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகெண்டனர்.
மேற்கண்ட இணையதளத்தில் பயனாளி சேவையை பெற முதலில் பதிவு செய்யவேண்டும். பின்னர் உரிய சேவையை தேர்ந்தெடுத்து கடைகள் அல்லது கொதிகலன் குறித்த அடிப்படை விவரங்களை பதிவு செய்யவேண்டும். அதற்குரிய கட்டணத்தை இணையவழியில் செலுத்தி உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
துறையின் பரிசீலனைக்கு பிறகு ஏற்றக்கொள்ளப்பட்டபின் உரிமம், சான்றிதழ் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த பதிவில் பிரத்யேக குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் சான்றிதழின் உண்மை தன்மையை சரிபார்க்கலாம். தேவைப்படும்போது தரவிறக்கமும் செய்துகொள்ளலாம்.
உரிமம் புதுப்பித்தல்
இதன்மூலம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சான்றிதழ் இழப்பு போன்ற சிரமங்களை முற்றிலும் தவிர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தில் கொதிகலன்கள் சட்டம்- 1923 மற்றும் புதுச்சேரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1964-ன்படி உரிமம் பதிவு செய்தல், புதுப்பித்தல், அதற்கான கட்டணம் செலுத்துதல், விண்ணப்பத்தின் நிலை அறிதல், சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் அதன் உண்மை தன்மையை சரிபார்த்தல் ஆகிய சேவைகளை நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை செல்போன் மூலமாகவும் பயன்படுத்திக் கெள்ளலாம். இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பயன்பெறுவார்கள். ஒவ்வொரு காலகட்ட பரிசீலனையின்போதும் விண்ணப்பத்தின் நிலை குறித்தும் விண்ணப்பதாரர்கள் அறிந்துகெள்ளலாம்.