

சென்னை,
தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1872-ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நாட்டின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சுதந்திரத்திற்கு பிறகு நடத்தப்படும் 8-வது கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கம் குறித்த அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி மத்திய அரசு, அரசிதழில் வெளியிட்டது.
தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்த அறிவிப்பை தங்களது அரசிதழில் மறுவெளியீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
அதன்பின்னர், இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இந்தியா முழுவதும் நிர்வாக எல்லைகள் இறுதி செய்யப்பட்டன. முதற்கட்டமாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்தப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் முதல் கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சுய கணக்கெடுப்பான இதில் ஆன்லைன் மூலம் தரவுகளை பதிவு செய்யலாம். இந்த சுய கணக்கெடுப்பு பணி இம்மாதம் (ஜூலை) 31-ந் தேதி வரை நடக்கிறது.
தொடர்ந்து, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் வீடு வீடாகச் வீடு கட்டமைப்பு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட இருக்கிறது. இந்த கணக்கெடுப்பு பணியின்போது, 33 கேள்விகள் கேட்கப்படும். இந்த தரவுகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்படும். ஆகஸ்டு 30-ந் தேதி இந்தப் பணிகள் நிறைவடையும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க இருக்கிறது. அது முடிவடைந்த பிறகு, ஏப்ரல் மாதம் இறுதியில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முழுவிவரம் காண்க;