தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்தது

தசரா திருவிழாவையொட்டி பக்தர்கள் விரதம் இருப்பதால், தூத்துக்குடியில் மீன்களின் விலை குறைந்தது. ஒரு கிலோ சீலா மீன் ரூ.650-க்கு விற்பனையானது.
தூத்துக்குடியில் மீன்கள் விலை குறைந்தது
Published on

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தசரா திருவிழாவையொட்டி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக ஏராளமானோர் அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் சனிக்கிழமைகளில் கரை திரும்புவார்கள். அதன்படி நேற்று அதிக அளவு நாட்டு படகுகள் கரை திரும்பியது. இதனால் மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது.

மீன்கள் விலை குறைந்தது

இந்த படகுகளில் அதிகளவு ஊழி மீன், சீலா மீன், விளை மீன்கள் வந்தன. மீன்களின் வரத்து அதிகமாக இருந்தும் மீன்களை வாங்க குறைவான பொதுமக்கள், வியாபாரிகளே வந்திருந்தனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.1,200-வரை விற்பனையான சீலா மீன் நேற்று கிலோ ரூ.650-க்கும், ரூ.500-வரை விற்பனையான விளைமீன் ரூ.300-க்கும், ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான ஊளி மீன் ரூ.200-க்கும் விற்பனையானது.

ஒரு கிலோ பாறை மீன் ரூ.200-க்கும், சூரை மீன் ரூ.100-க்கும் விற்பனையானது. தசரா திருவிழா முடிந்த பின்னர் மீன்கள் விலை மீண்டும் உயரும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com