ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்
Published on

ராமேசுவரம், 

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆலோசனை கூட்டம்

ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் மீன்பிடி டோக்கன் அலுவலகம் அருகே நடைபெற்றது. அனைத்து விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசு ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் எமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மீன் பிடிக்க செல்லும் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டிப்பதோடு, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை மீனவர்கள் குழுவினர் சந்தித்து வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தீர்வு

மேலும் மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவும் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் நாளை(செவ்வாய்க்கிழமை) தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி போராட்டம் முடியும் வரை இன்று முதல் (திங்கட்கிழமை) விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com