தூத்துக்குடியில் மீனவர் கத்தியால் குத்தி கொலை; நண்பர் படுகாயம்

தாளமுத்துநகர் பகுதியில் மீனவர் ஒருவர், அவரது நண்பர் மற்றும் அங்கே வந்த 4 பேரும் அமர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மீனவர் கத்தியால் குத்தி கொலை; நண்பர் படுகாயம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர், பூபாண்டியாபுரத்தில் வசித்துவரும் ஸ்டோன் என்பவரின் மகன் ஸ்னோவின் (வயது26), மீனவர். தூத்துக்குடி திரேஸ்புரம் பூபால்ராயபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சூசை(28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். நேற்று இரவு கடலுக்கு சென்று விட்டு தூத்துக்குடி தாளமுத்துநகர் மேட்டுப்பட்டி உமயம்மாள் கோவில் அருகே அமர்ந்து மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் 2வது தெருவை சேர்ந்த மலைராஜ் மகன் சந்தனராஜ்(எ) பாண்டி(20), மேட்டுப்பட்டி சங்குகுளிகாலனியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துக்குமார்(எ) கருப்பு(20) உள்பட 4 பேர் அங்கு வந்து ஸ்னோவின் மற்றும் அவருடைய நண்பர்களுடன் அமர்ந்து மதுபானம் குடித்துள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த சந்தனராஜ்(எ) பாண்டி மற்றும் முத்துக்குமார்(எ) கருப்பு உள்பட 4 பேரும் சேர்ந்து ஸ்னோவினை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதை தடுத்த அவரது நண்பர் சூசை என்பவருக்கும் தலையில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் அந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

கத்திக்குத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஸ்னோவின் உயிரிந்தார். சூசைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காசிபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com