மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர் - தேடும் பணி தீவிரம்

மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி 24 மணி நேரத்தை கடந்தும் நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர் - தேடும் பணி தீவிரம்
Published on

மாமல்லபுரம்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் நாகை நம்பியார் கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி உள்ளிட்ட பதினைந்து பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

நேற்று மாலை புதுச்சேரி-மகாபலிபுரம் இடையே மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூறைக்காற்று வீசியதால் விசைப்படகில் பக்கவாட்டில் நின்றிருந்த தங்கசாமி கடலில் தவறி விழுந்தார். உடனடியாக சக மீனவர்கள் தங்கசாமியை தேடிப் பார்த்தனர். ஆனால் கடலில் விழுந்த தங்கசாமி மாயமானார். இதுகுறித்து மீனவர்கள், தொலைபேசி மூலம் படகு உரிமையாளர் மற்றும் காரைக்கால் கடலோர பாதுகாப்பு போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடலில் விழுந்து மாயமான தங்கசாமியை தேடும் பணியில் சக மீனவர்கள் மற்றும் இந்திய கடலோர ரோந்து படையினர் கடந்த 24 மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். காரைக்காலில் இருந்து 125 நாட்டிகல் தொலைவிலும் மகாபலிபுரம் வடக்கே ஆழ்கடல் பகுதியில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் சென்று தேடி வருகின்றனர். மேலும் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல் படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

நாகை நம்பியார் நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் கடந்த மாதம் கடலில் தவறி விழுந்து மாயமான நிலையில் மீண்டும் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் காரைக்கால் மற்றும் நாகை மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com