தமிழகத்தில் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

தமிழகத்தில் வரும் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலமாகும்.
தமிழகத்தில் 15-ந்தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்
Published on

சென்னை,

மன்னார் வளைகுடா கடலில் தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால், மீன் வளம்குறைந்து விடும்.

இதனை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதிமுதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

மீன்பிடித் தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல், துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவைக்கப்படும். அதேநேரத்தில், மீன்பிடித் தடைக்காலத்தைப் பயன்படுத்தி, மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவர்.

எனினும், வள்ளம், கட்டுமரம், பைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்வர். மீன்பிடித் தடைகாலமான இரு மாதமும் உயர் ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மீன்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com