திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் ஓட்டம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை 20-ந்தேதி சுடர் ஓட்டம் சென்றடையும்.
திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் ஓட்டம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

சேலத்தில் ஜனவரி 21-ம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் ஓட்டத்தை இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் அருகில் இன்று தொடங்கி வைத்தார். எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை 20.01.2024 அன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடையும்.

இளைஞர் அணிச் செயலாளர் மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் கழகத் தலைவரிடம் ஒப்படைக்கிறார். மாநாட்டுச் சுடர் ஓட்டம் செல்லும் இடங்களில் எல்லாம் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மாநாட்டுச் சுடரை ஏந்திச் செல்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com