

கோவை,
கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏர் அரேபியா, இண்டிகோ நிறுவனங் கள் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் படைகள் தாக்குதலை தொடுத்தன. போர் பதற்றம் காரணமாக கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் ஏர் அரேபியா விமான நிறுவனம் சார்பில் நேற்று அதிகாலை 3.10 மணியளவில் ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் வந்தது. அதில் 170 பயணிகள் கோவை வந்தனர். பின்னர் அதே விமானம் நேற்று அதிகாலை 3.50 மணிக்கு கோவையில் இருந்து ஷார்ஜா வுக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
போர் பதற்ற சூழல் காரணமாக ஷார்ஜாவில் பலர் தவித்து வந்தனர். இந்த நிலையில் ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த விமானம் தொடர்ந்து இயக்கப்படுமா? என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.