குற்றால அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 4-வது நாளாக தடை

தொடர்ந்து மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் கொட்டியது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்த நிலையில் அதன்பிறகு வெயில் முகம் காட்ட தொடங்கியது.
முற்றிலும் மழைப்பொழிவு குறைந்ததால் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று தணிந்தது. செம்மண் நிறத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு விழுந்த நிலையில் நேற்று அனைத்து அருவிகளிலும் தெளிந்த நீராக விழத்தொடங்கியது. ஆனால் அருவிகளில் வெள்ளத்தின் சீற்றம் இன்னும் குறையவில்லை.
இந்நிலையில் 4-வது நாளாக இன்றும் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதலே குற்றால அருவிகளுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினம் மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூரில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
அவர்களில் பலரும் குற்றால அருவிகளில் குளிக்க விரும்புவார்கள். இந்த நிலையில் தற்போது மழை இல்லாததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைய வாய்ப்புள்ளது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் விரைவில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுபவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.






