சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

செம்மொழி பூங்காவில் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்
Published on

சென்னை

சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சியை ஜனவரி 2-ந்தேதி(நாளை) தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

நாளை தொடங்கி ஜனவரி 18-ந்தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இதனை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன், மலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல உருவங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன. மலர் கண்காட்சியை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் நடைபெறும் ஏற்பாடுகளை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று நேரில் பார்வையிட்டார். 2022 முதல் சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக ஊட்டி, ஏற்காடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com