பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா?

முதுநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா? என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா?
Published on

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. நடப்பாண்டு முதுநிலை மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கை விட்டுள்ளது. இது மிகக்கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதனால், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த 2160 மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய முதுநிலை மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சதி. சமூக அநீதியாகும்.

மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் போராடி நடை முறைப்படுத்த வைத்தார். மத்திய மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை முதல் முதலில் நடைமுறைப்படுத்தியது நான் தான். இவ்வாறு போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை முன்னறிவிப்பின்றி ரத்து செய்வது நியாயமல்ல. இத்தகைய சமூக அநீதி தொடருவதற்கு பா.ம.க. அனுமதிக்காது. எதிர்த்து போராடும்.

மத்திய அரசின் இந்த சமூக அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடிப்பதற்கு முன்பாக நடந்த தவறு சரி செய்யப்பட வேண்டும். அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிகளில் தேவையான திருத்தங்களை செய்யும்படி மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com