மையனூர் -தொண்டனந்தல் சாலையில் வனத்துறை அதிகாரி ஆய்வு

விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக மையனூர் -தொண்டனந்தல் சாலையில் வனத்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டனர்.
மையனூர் -தொண்டனந்தல் சாலையில் வனத்துறை அதிகாரி ஆய்வு
Published on

ரிஷிவந்தியம், 

பகண்டை கூட்டுரோடு- மாமானந்தல் சாலை கடந்த ஆண்டு சங்கராபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த சாலையில் மேலப்பழங்கூர் காப்புக்காடு இருந்ததால் மையனூர் -தொண்டனந்தல் இடையே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலையை விரிவாக்க செய்ய வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. இதனால் அங்கு சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக சிறுவங்கூரில் உள்ள கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்று வர பெரும் சிரமம் அடைந்தனர். இதையடுத்து மையனூர் -தொண்டனந்தல் சாலையை விரிவாக்கம் செய்ய வனத்துறை அனுமதி வழங்க வேண்டும். மேலும் அந்த சாலையில் அதிக அளவில் வளைவுகள் உள்ளதால், விபத்துகள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க மையனூர்-தொண்டனந்தல் சாலையில் வளைவுகள் இல்லாத வகையில் சாலைவிரிவாக்கம் செய்ய வனத்துறை உரிய ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மையனூர் -தொண்டனந்தல் சாலையை விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து விழுப்புரம் சரக வன அலுவலர் சுமேஷ்சோமன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஆய்வாளர் கதிர்வேல், தொழில்நுட்ப உதவியாளர் ரமேஷ், சாலை பணியாளர் நாகராஜ் மற்றும் வன அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com