

தென்காசி,
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் யானை தடுப்பு அகழி வெட்டும் பணி செய்த ஒப்பந்தக்காரரிடம் ரூபாய் 1 லட்சம் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்சரகத்திற்குட்பட்ட மலைப் பகுதியில், வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக யானை தடுப்பு அகழி வெட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த பணிகளை உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஒருவர் மேற்கொண்டு வந்தார்.
இப்பணிக்கான தொகையை விடுவிக்கவும், பணிகளைத் தடையின்றி நடத்தவும் சிவகிரி வனச்சரக அலுவலரான கதிரவன் (வயது 51) என்பவர், ஒப்பந்தக்காரரிடம் ரூபாய் 1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்தக்காரர், இது குறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் ஆலோசனையின்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் 1 லட்சம் நோட்டுகளை ஒப்பந்தக்காரர் வனத்துறை அலுவலர் கதிரவனிடம் கொடுக்கச் சென்றார். சிவகிரி வனத்துறை அலுவலகத்தில் வைத்து கதிரவன் அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
ரசாயன சோதனையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வனத்துறை அலுவலர் கதிரவனை போலீசார் முறைப்படி கைது செய்தனர். மேலும், அவரது அலுவலகம் மற்றும் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.