

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத் தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் புல்வெளிகள், புதர்கள், செடி கொடிகள் என அனைத்தும் காய்ந்து காணப்படுகிறது. ஆங்காங்கே வருவாய் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்து வருகிறது.
இந்த நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சி பள்ளங்கி கிராமத் தின் அருகே உள்ள தனியார் பட்டா நிலங்களிலும், வருவாய் நிலங்களிலும் திடீரென காட்டு தீ ஏற்பட்டது.
நேற்று காலை வரை தொடர்ந்து தீப் பற்றி எரிந்து கொண்டிருந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. சுமார் 10 அடி தூரத்திற்கு தீ சுவாலைகளாக காட்சியளித்தன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் கடும் புகை மண்டலமாக இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீ தொடர்ந்து எரிவதால் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பரவும் அபாயமும் உள்ளது.
காட்டுத்தீ விளைநிலங்களில் பரவாமல் இருக்க விவசாயிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் வனத்துறையினர் கவனம் செலுத்தி தீயை கட்டுப்படுத்தி வனப்பகுதிக்குள் பரவாமல் தடுக்க வேண்டும். காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் தொடர்வதால் இப்பகுதியில் உள்ள வனவிலங்குகள், உயர்ரக மரங்கள், செடி கொடிகள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன. இந்த தீ அருகே உள்ள கிராம பகுதிக்குள் நுழையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் பெரும்பாறை அருகே சித்தரேவு மலைப்பாதையில் 3 இடங்களில் நேற்று பகலில் திடீரென்று காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனஊழியர்கள், தீத்தடுப்பு காவலர்கள் சம் பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 குழுக்களாக பிரிந்து தீயை அணைத் தனர்.