ரூ. 4 கோடி சொத்து மதிப்புள்ள பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவ வீரர்

விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்தனர்.
ரூ. 4 கோடி சொத்து மதிப்புள்ள பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவ வீரர்
Published on

சந்தவாசல்,

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 65), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி கஸ்தூரி. இவர் கண்ணமங்கலம் அருகே உள்ள மங்களாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு விஜயன் ஆளானார்.

இந்த நிலையில் மே 2-ந் தேதி படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய விஜயன் வந்தார். தரிசனம் முடிந்து கையில் வைத்திருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள நில பத்திரத்தை உண்டியலில் போட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார். இன்று காலை ரேணுகாம்பாள் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற இருந்தது. இதனை அறிந்த விஜயன் கோவிலுக்கு வந்தார். கோவில் ஊழியர்களிடம் உண்டியலில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரம் உள்ளது.

அதனை முறையாக கோவிலுக்கு மாற்றி எழுதி தருவதாகவும் கூறினார். இதனை கேட்டு கோவில் ஊழியர்கள், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் விஜயன் கோவில் உண்டியலில் பத்திரத்தை போட்ட தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்தனர். கோவில் ஊழியர்களிடம் சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு கதறி அழுதனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com