

சென்னை,
சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் சி.எஸ்.கர்ணன். இவர் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசி பல காணொலிகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக வழக்கறிஞர் தேவிகா அளித்த புகாரின் அடிப்படையில் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ்.கர்ணன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கடந்த 2017-ம் ஆண்டு முதலே தான் கடும் மன அழுத்தத்திலும், விரக்தியிலும் இருந்து வந்ததால் நீதிபதிகள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட்டதாகவும், தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என சி.எஸ்.கர்ணன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்றம் எச்சரித்த பின்னரும் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நீதிமன்றத்தில் பணியாற்றும் பெண்கள் குறித்து 20 அவதூறு வீடியோக்களை கர்ணன் வெளியிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாரதிதாசன், ஜாமீன் கோரிய முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.