

சென்னை,
கரூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து செயல்பட்டார்.
இந்த நிலையில் கடந்த இருவார காலமாக செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளில் மாற்றம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே செந்தில் பாலாஜி தி.மு.க.வில் இணையப் போவதாகவும், அக்கட்சி தலைமையுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருகிற 16-ந்தேதி சென்னையில் நடைபெறும் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேரமாட்டார். செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேர உள்ளதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் வேட்புமனுவை நிராகரிக்க செய்ய தமிழக அரசு முயற்சி செய்கிறது என கூறினார்.