

நெல்லை,
நெல்லை மாவட்டம் முக்கூடல் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 42). இவர் மதுரையில் கேட்டரிங் தொழில் செய்து வந்தார்.
மேலும், பணம் கொடுக்கல்-வாங்கல், கடன் வாங்கி கொடுப்பது போன்ற தொழிலும் செய்து வந்துள்ளார். இதற்காக மதுரை மாவட்டம் வேடையர் புளியங்குளத்தில் உள்ள அங்கயற்கண்ணி நகரில் முருகன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தா.
இதற்கிடையே, முருகன் தன்னுடைய மனைவி அன்னதாய் மற்றும் மகளை முக்கூடலுக்கு அனுப்பி வைத்துவிட்டார். இதனால் முருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை, நெல்லையில் உள்ள ஓட்டல்களில் தங்கி வந்தார்.
கடந்த 21-ந் தேதி நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் முருகன் அறை எடுத்து தங்கினார். அங்கு வைத்து அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த ஓட்டலில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, முருகன் விஷம் குடிப்பதற்கு முன்பாக அவரது செல்போனில் பேசிய வீடியோ காட்சி ஒன்றை தனது மனைவி மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருந்தார்.
அந்த வீடியோவில் தன்னிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை மதுரையை சேர்ந்த ஒரு பெண் வாங்கி கொண்டார். அந்த பெண்ணுடன் மேலும் சிலர் சேர்ந்து தன்னை மிரட்டி, கடனாளியாக ஆக்கிவிட்டனர். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்வதாகவும், தன்னுடைய சாவுக்கு அந்த பெண் மற்றும் அவருடன் சேர்ந்தவர்களே காரணம் என்று கூறிஉள்ளார்.
இந்த வீடியோவை முருகன் மனைவி அன்னதாய் மற்றும் குடும்பத்தினர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் காண்பித்து புகார் அளித்தனர். முருகனை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து மேலப்பாளையம் போலீசார், முருகனின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று மாலை முருகன் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.