22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.
22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
Published on

இலவச சைக்கிள்

தமிழகத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் இலவச சைக்கிளை பொறுத்தவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் அரசு ஐ.டி.ஐ.-யில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பள்ளிகள், கடந்த கல்வி ஆண்டின் இறுதியில் இருந்து முழுமையாக செயல்பட தொடங்கின. இதையடுத்து பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகி, இந்த கல்வி ஆண்டில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வகுப்புகள் தொடங்கி விட்டன. எனவே மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட இருக்கிறது.

22 ஆயிரம் மாணவ-மாணவிகள்

இதற்காக மாவட்ட வாரியாக இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 22 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு வழங்க சைக்கிள் உதிரிபாகங்கள் வந்தன. அந்த உதிரி பாகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு சைக்கிள்கள் தயாராகி விட்டன. இதை தொடர்ந்து முதல்கட்டமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இலவச சைக்கிள்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் அவை விரைவில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com