

சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத்திருத்தம் குறித்து இருவரும் விவாதித்தனர்.
மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது சில முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அளித்தார்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் இலவச மின்சார திட்டங்களுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் 50.88 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.