

பந்தலூர்
பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பந்தலூர் அரசுஆஸ்பத்திரியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நசுருதீன், சாதிக் அகமது, ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சை மருத்துவர்கள் அந்தோணியம்மாள், ரகுபதி, அஞ்சனாஸ்ரீ, அக்ஸந்த் அகமது, ஆகியோர் 200 பேருக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதில் 30 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.