

பழனி,
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நேற்று காலை முதல் மாலை வரை தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 150 ஆண்டுகள் பழமையான தைப்பூசத்தேர் பழுது அடைந்துள்ளது.
அதனை மராமத்து செய்துவது, திருக்கோவில் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாக பணிபுரிபவர்களை நிரந்தமாக்குவது, பழனியாண்டவர் கல்லூரியை பல்கலையாக தரம் உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
பழனியை திருப்பதி போல தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில் பக்தர்கள் முடிகாணிக்கை செய்ய கட்டணம் இல்லை. இதேபோல் பழனியிலும் கட்டணம் இல்லாமல் முடிகாணிக்கை செலுத்துவது குறித்து முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
இதேபோன்று, பழனியில் சித்தா கல்லூரி விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பழனி கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.