விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு, விவசாய நிலத்தில் முழுமையாக நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 மரக்கன்றுகள் வரையிலும் இலவசமாக வழங்கப்படும் என வேளாண்மை உதவி இயக்குநர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விநியோகம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு வனத்துறை நாற்றுப்பண்ணை சார்பில் இலவசமாக மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2026-27-ம் நிதியாண்டில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு, 'காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம்' மற்றும் 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' ஆகிய திட்டங்களின் கீழ் விளாத்திகுளம் வனத்துறை நாற்றுப்பண்ணையில் பின்வரும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 மரக்கன்றுகள் இலவசம்

தேக்கு, மலைவேம்பு, மகாகனி, ஈட்டி, வேங்கை மரக்கன்றுகள் அனைத்தும் விளாத்திகுளம் வட்டார விவசாயிகளுக்கு முழுமையாக இலவசமாக வழங்கப்படும். விவசாய நிலத்தில் முழுமையாக நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 250 முதல் 300 மரக்கன்றுகள் வரையிலும், நிலத்தின் வரப்புகளைச் சுற்றி மட்டும் நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 150 மரக்கன்றுகள் வரையிலும் வழங்கப்படும்.

இந்த வகை மரங்கள் அதிகப் பராமரிப்பு இன்றி எளிதாக வளரக்கூடியவை. எதிர்காலத்தில் விவசாயிகளுக்குச் சிறந்த பொருளாதார வருவாயைத் தருவதுடன், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்.

மரக்கன்றுகள் முன்பதிவு செய்து பெறலாம்

விருப்பமுள்ள விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் உடனடியாக முன்பதிவு செய்து கொண்டு, செப்டம்பர் மாத இறுதியிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கும் முன்பதிவிற்கும் விளாத்திகுளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com