கூடலூர் பகுதியில் மரத்திலேயே வெடித்து வீணாகும் இலவம் பஞ்சுகள்

கூடலூர் பகுதியில் மரத்திலேயே இலவம் பஞ்சுகள் வெடித்து வீணாகி வருகின்றன.
கூடலூர் பகுதியில் மரத்திலேயே வெடித்து வீணாகும் இலவம் பஞ்சுகள்
Published on

கூடலூர் அருகே கல்லுடைச்சான்பாறை, பெருமாள்கோவில்புலம், கழுதைமேடு, புதுரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி காடுகள் உள்ளன. இந்த காடுகளில் விவசாயிகள் உயர்ரக இலவம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இந்த மரங்களில் இலவம் காய்கள் காய்த்து, சீசன் காலத்தில் அறுவடை செய்யப்படுகிறது. அப்போது சில விவசாயிகள் சீசன் காலத்துக்கு முன்னதாக விளைச்சல் அடைந்த மரங்களை வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விட்டுவிடுவார்கள். மேலும் சில விவசாயிகள் காய்களை அறுவடை செய்து, மொத்த வியாபாரிகளிடம் பஞ்சுகளை விற்பனை செய்வார்கள்.

இந்தநிலையில் தற்போது இலவம் பஞ்சுகளை அறுவடை செய்யும் சீசன் காலமாகும். ஆனால் இலவம் பஞ்சுகளை வாங்க உள்ளூர் வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. வெளியூர் வியாபாரிகளும் இலவம் பஞ்சுகளை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் விவசாயிகள் இலவம் காய்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுவிட்டனர். தற்போது மரங்களில் காய்கள் வெடித்து பஞ்சுகள் வெளியேறி வீணாகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு இலவம் காய் மகசூல் அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றை வாங்க வியாபாரிகள் வராததால் விற்கமுடியாமல் தவிக்கிறோம் என்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com