மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு

மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் நேற்று அதிகாலையில் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு சரக்கு ரெயில், பராமரிப்பு பணிக்காக மதுரை ரெயில் நிலையம் வந்தது.

அந்த, ரெயில் 3-வது பிளாட்பாரத்துக்கான தண்டவாளத்தில் வந்தபோது ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த 8, 9 மற்றும் 10-வது பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது.

இதனால், அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர்கள், உடனடியாக கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அத்துடன், நள்ளிரவு 2 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் அபாய சங்கு திடீரென ஒலிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

தென்மாவட்ட ரெயில்கள் தாமதம்

அதனை தொடர்ந்து, தடம் புரண்ட பெட்டிகளின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டது. பின்னர் விபத்து மீட்பு கிரேன் மூலம் தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. இதனால், 3-வது பிளாட்பாரத்தில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.

ரெயில் பெட்டிகளின் மீட்பு பணிகள் அதிகாலை 5.30 மணி வரை நடந்தது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

அந்த ரெயில்கள் 1-வது மற்றும் 2-வது பிளாட்பார தண்டவாளங்களில் மட்டும் நின்று சென்றதால், ரெயில்களின் போக்குவரத்தில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால், தென்மாவட்ட ரெயில்கள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

தடம்புரண்ட சரக்கு ரெயிலானது, நேற்று காலை 8.30 மணிக்கு பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com