

குன்னம்:
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆதனூர், பிலிமிசை, கொட்டரை மற்றும் புதுக்குறிச்சி ஆகிய கிராமங்களில் அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நிருபர்களிடம் கூறியதாவது;-டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் இழப்பை சந்தித்து வரும் சூழ்நிலையிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் பஸ் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்ற நிலைப்பாட்டையே தொடர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் தற்போது பஸ் கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. மேலும் அரசு போக்குவரத்து கழகம் லாபத்துடன் கூடிய வருவாயை பெருக்கிட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பஸ்களின் பின்புறத்தில் விளம்பரம் செய்வது போல், விரைவில் பஸ்களின் 2 பக்கவாட்டு பகுதிகளிலும் விளம்பரம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் அரசு விரைவு பஸ்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வரும் சரக்கு போக்குவரத்து சேவையை அனைத்து அரசு பஸ்களிலும் விரிவுபடுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.