தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் மின்வெட்டு - மின்சார வாரியம் விளக்கம்

சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் மின்வெட்டு - மின்சார வாரியம் விளக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு உடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரத்துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணி நேரமும் செயல்படும் 'மின்னகம்' நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com