அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு வழிபட அனுமதி

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அரசு அனுமதி அளித்து உள்ளது.
அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு வழிபட அனுமதி
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து வருகிறது.

எனினும், தமிழகத்தில் திட்டமிட்டபடி கடந்த செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் கல்லூரி விடுதிகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

எனினும், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. இதேபோன்று, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது.

எனினும், மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே இந்த நடைமுறை தொடருகிறது என தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வழிபட அரசு அனுமதி அளித்து உள்ளது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com