

திருநெல்வேலி மாவட்டத்தில், நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் (வயது 52), கடந்த 17-ம் தேதி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6 நாட்களாகியும் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படாததால், அவரது மகள் பேபிகனி(24) கடும் மன உளைச்சலில் இருந்தார்.
பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராகப் பணியாற்றி வந்த அவர், "அப்பாவின் பிரிவைத் தாங்க முடியவில்லை, கொலையாளிகளும் இன்னும் பிடிபடவில்லை" என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தத் துயரச் சம்பவத்தைக் கண்டித்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தந்தை மற்றும் மகள் என அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.