

சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் நேற்று (25.05.2026) வெளியிட்டுள்ளார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமான இத்தகைய அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
குறு விவசாயிகளுக்கு ரூ.50,000/- சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000/- வரை தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு பெற்ற கடன் தொகையில் சிறு தொகை மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதி அடிப்படையில் இந்த அறிவிப்பு இல்லை என்பதை விவசாயிகள் சார்பாக சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகித கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.