கார் தேவையில்லாத எம்.எல்.ஏ.க்களின் நிதியை சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் சேர்க்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்

சட்டமன்ற உறுப்பினர்கள் கார் பெறுவதை தவிர்ப்பதை அரசின் மீது உள்ள விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஈ.ஆர்.ஈஸ்வரன்
Published on

கோவை,

கார் தேவையில்லாத எம்.எல்.ஏ.க்களின் நிதியை சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் சேர்க்க வேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

தமிழக சட்டமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குவது பற்றி முதல்-அமைச்சர் அறிவிப்பும், பல தரப்பட்ட விவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் விமர்சனங்களும், மாறுபட்ட கருத்துக்களும் நிலவிக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு

இந்த சூழ்நிலையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு தேவையான வசதி இருக்கின்றன கார் தேவை இல்லை என்று நேர்மையாக பொது வாழ்வின் மீது பற்று கொண்டு அறிவித்திருக்கிறார்கள்.

அதை தமிழக அரசு ஆக்கபூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும். அரசு காருக்காக நிதி கொடுக்க முன்வந்தும் அதை வேண்டாமென்று கூறியிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்திலே பாராட்ட வேண்டும்.

நிதி

கார் தேவையில்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு காருக்கான நிதியை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்காக சேர்க்க வேண்டும். அவரவர் சட்டமன்ற தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளுக்காக அந்த நிதியை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் கார் பெறுவதை தவிர்ப்பதை அரசின் மீது உள்ள விமர்சனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com