மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லபட்ட நோயாளி விபத்தில் பலி ; 2 பேர் காயம்

உளுந்தூர்பேட்டைஆம்புலன்ஸ் கவிழ்ந்ததில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி பலியானார், 2 பேர் காயம் அடைந்தனர்.
மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு செல்லபட்ட நோயாளி விபத்தில் பலி ; 2 பேர் காயம்
Published on

உளுந்தூர் பேட்டை

கள்ளக்குறிச்ச மாவட்டம், தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (58) என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக உறவினர்கள் கொண்டு சென்று கொண்டிருந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை அடுத்த செம்பியன் மாதேவி என்ற பகுதியில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற இரு சக்கர வாகனம் மீது ஆம்புலன்ஸ் மோதாமல் இருக்க ஆம்புலன்ஸ் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி சம்பவ இடத்திலேயே பலியானார். ஆம்புலன்ஸில் உள்ளே இருந்த மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து எலவனாசூர் கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உயிரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டவர் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com