கிருஷ்ணகிரிமாவட்டம் முழுவதும்350 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 350 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரிமாவட்டம் முழுவதும்350 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் 350 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,300 சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். 3-ம் நாளான நேற்று விநாயகர் சிலைக்கு பூஜை செய்து, வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். அங்கு, தாலுகா இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை, ஆம்புலன்ஸ் நிர்வாகம், தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் விநாயகர் சிலைகளைக் கொண்டு வருபவர்களை குறிப்பிட்ட தூரத்தில் தடுத்து நிறுத்தி, சிலைகளை கரைக்க தனியாக ஆட்களை நியமித்து தண்ணீரில் கரைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி கிரேன் மூலம் சிலைகளை எடுத்து சென்று கே.ஆர்.பி. அணையில் கரைத்தனர்.

113 சிலைகள் கரைப்பு

அணையிலும், குறிப்பிட்ட தூரத்திற்கு கயிறு கட்டி, தீயணைப்புத்துறையினர் படகிலும், மீன்வளத்துறையினர் பரிசலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரபட்ட 113 சிலைகள் கே.ஆர்.பி. அணையில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகளை கொண்டு செல்பவர்கள் அணையில் இறங்கி சிலையை கரைக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் அணையில் குளிக்காமல் அருகில் உள்ள வாய்க்காலில் குளித்து சென்றனர். இரவு 9 மணி வரை சிலைகள் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தேன்கனிக்கோட்டை

தளி பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 14-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 3-ம் நாளான நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தளி பெரிய ஏரியில் கரைக்கப்பட்டன. தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேப்பனப்பள்ளி பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் கரைத்தனர். இதேபோல் ஆந்திர மாநிலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு ஏரியில் கரைத்தனர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 350 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com