

நெல்லை பேட்டை மயிலப்பபுரத்தை சேர்ந்தவர் பிச்சைராஜ். முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர். இவரை ஒரு கும்பல் பேட்டை ரெயில் நிலையம் அருகே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுதொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டை கருங்காடு ரோட்டை சேர்ந்த பாண்டியராஜா (வயது 23), சுத்தமல்லி பாரதி நகர் நம்பிதுரை (29) ஆகியோரை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நெல்லை மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார், டவுன் உதவி கமிஷனர் சுப்பையா ஆகியோர் பரிந்துரை செய்தனர். நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (கூடுதல் பொறுப்பு) பிரவேஷ்குமார் இந்த பரிந்துரையை ஏற்று 2 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.