

சென்னை,
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோயம்பேடு போலீசார், காரில் வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ஜேக்கப் (வயது 30) என்பவரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் சாப்ட்வேர் என்ஜினீயரான அவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், விடுமுறை நாளில் காரில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. அந்த வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 80 கிராம் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.