

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் முகாமில் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மாவீரன் குடியிருப்பில் வசித்து வரும் மன்னாரை சேர்ந்த பாஸ்கரன் என்கிற வாச்சு குட்டி (வயது 36) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகாமில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாஸ்கரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.