கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கிய பெட்டகத்தில் நெய் மற்றும் பேரீட்சை பழம் மாயம்

கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் கொடுக்கும் முன் ஊழியர்கள் அதில் அனைத்து பொருட்களும் இருப்பதை உறுதி செய்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மருத்துவ பெட்டகம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேரகுளம் பகுதியை சேர்ந்த சிவகாமி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு தாய் சேய் நல ஊட்டசத்து பெட்டகம் வழங்கபட்டது. அதை வாங்கிய பெண் வீட்டிற்கு சென்று அதில் உள்ள பொருள்களை சரிபார்க்கும் போது அந்த பெட்டகத்தில் இருக்க வேண்டிய நெய் பாட்டில் இல்லை. மேலும் பேரீட்சை பழ டப்பாவில் பழம் ஏதுமின்றி காலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தமிழக அரசு வழங்கும் பெட்டகத்தில் இருக்க வேண்டிய பொருட்கள்:-

ஊட்டச்சத்து மாவு

இரும்பு சத்து டானிக்

பேரீச்சை பழம்

ஆவின் நெய்

குடற்புழு நீக்க மாத்திரை

துண்டு மற்றும் சிறிய டம்ளர் ஆகிய பொருட்கள் இருக்க வேண்டும்.

ஆத்திரமடைந்த குடும்பத்தினர்

இதனால் விடுபட்ட பொருட்கள் குறித்து கேட்பதற்காக சிவகாமியின் குடும்பத்தினர் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர்களிடம் கேட்ட போது அவர்கள் முறையான பதில் அளிக்காமல் சிவகாமியின் குடும்பத்தை அனுப்பினர். இதில் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் பொருட்கள் காணாமல் போன சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் மருத்துவ அலுவலர் தரப்பில் கூறியதாவது:-

உறுதி

மருத்துவ பெட்டகங்கள் கொள்முதல் நிலையத்தில் இருந்து வரும்போது சில பெட்டகங்களில் பொருட்கள் விடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதிக்கபட்ட சிவகாமிக்கான விடுபட்ட பொருட்கள் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் இனி வரும் காலங்களில் பெட்டகங்களை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கும் முன் ஊழியர்கள் அதில் அனைத்து பொருட்களும் இருப்பதை உறுதி செய்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com