

தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மீனவ கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மணப்பாட்டைச் சேர்ந்த ஜெயக்கர் என்பவர் நேற்று அதிகாலை சக மீனவர்களுடன் நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்.
கரையிலிருந்து சுமார் 23 கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஜெயக்கர் வீசிய வலையில் ராட்சத மீன் ஒன்று சிக்கியது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீனவர்கள் அந்த மீனைப் படகில் ஏற்றினர். அப்போது அது ஒரு ராட்சத சுறா மீன் என்பது தெரியவந்தது.
கரைக்கு கொண்டு வரப்பட்ட அந்தச் சுறா மீனை எடை போட்டபோது அது 73 கிலோ எடை இருந்தது. இந்த ராட்சத சுறாவை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துச் சென்றனர். பின்னர் நடைபெற்ற ஏலத்தில், வியாபாரி ஒருவர் இந்தச் சுறா மீனை 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஏலம் எடுக்கப்பட்ட மீன் பின்னர் வேன் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டது.