பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை அடித்து உதைத்த சிறுமி

கோப்புப்படம்
போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, 74 வயதான தாத்தாவை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர், கட்டிட மேஸ்திரி. அவருக்கு வயது 74. இவருடைய மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கட்டிட மேஸ்திரி மற்றும் அவருடைய மருமகள், 2 பேத்திகள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். மருமகள் அப்பகுதியில் உள்ள பஞ்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். 19 வயது பேத்தி கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 11 வயது பேத்தி பள்ளிக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் மருமகள் அதிகாலையில் பஞ்சாலைக்கு வேலைக்கு சென்ற பிறகு, 19 வயது பேத்தியிடம் கட்டிட மேஸ்திரி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 11 வயது சிறுமிக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுமி, தாத்தாவை அடித்து உதைத்துள்ளார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம் 2 மகள்களும் தாத்தா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கூறியுள்ளனர்.
அதிர்ச்சியடைந்த அவர் தேவக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, 74 வயதான தாத்தாவை கைது செய்தனர். பின்னர் அவரை தேவக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






