ஆற்றில் மூழ்கி உயிரிழந்த காதலி.. துக்கம் தாளாமல் வாலிபர் எடுத்த விபரீத முடிவு

மாணவி ஓணம் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊருக்கு சென்றநிலையில், அங்குள்ள ஒரு ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
பேரூர்,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக் கன்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் தனுஷ் (வயது 21). கறிக்கோழி கடை ஊழியர். இவருக்கும், அங்குள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில் அந்த மாணவி ஓணம் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊரான கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதிக்கு சென்றார். அவர் அங்குள்ள ஒரு ஆற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அந்த மாணவி சொந்த ஊருக்கு சென்ற போது தனுசுக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டு இருந்து உள்ளார். கடந்த 2 நாட்களாக குறுஞ்செய்தியும் வராததால சந்தேகம் அடைந்த தனுஷ், காதலியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது தான் அவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தனுஷ், காதலி இல்லாத உலகில் தான் எப்படி வாழ முடியும் என்று நண்பர்களிடம் அழுது புலம்பினார். மேலும் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், விஷம் வாங்கி குடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் திடீரென்று வாந்தி எடுத்து உள்ளார். இது பற்றி பெற்றோர் கேட்டபோது, விஷம் குடித்துவிட்டதாக தெரிவித்தார்.
அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனுசை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






