

சென்னை,
தமிழக வெற்றிக் கழக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் ஞானசவுந்தரி சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
தமிழக அரசு கடந்த ஜூன் 5ஆம் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலையில் நியமனப்பட்டியல் என ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது.
இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் நான் விசாரித்த போது, இதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறினார். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளனர். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகிறது.
எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்-அமைச்சர் விஜய்க்கு இருக்கிறது. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
தொடர்ந்த நடந்த வழக்கு விசாரணையை அடுத்து அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயரை நீக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி த.வெ.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணையவழி (Online) முறையின் மூலமாக உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகன் மனைவி திருமதி M. ஞானசவுந்தரி, MS.No.4063/2015 அவர்கள் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.
மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பில் இன்றிலிருந்து அவருடன் எந்தவித கட்சி தொடர்போ, ஒத்துழைப்போ வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.