கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

விழுப்புரத்தில் பட்டப்பகலில் கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
Published on

பெண்ணிடம் நகை பறிப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த பேரங்கியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி கலையரசி (வயது 45). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக விழுப்புரம் தந்தை பெரியார் நகர் குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை ராமகிருஷ்ணனும், அவரது மனைவி கலையரசியும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து விழுப்புரம் தந்தை பெரியார் நகருக்கு மொபட்டில் புறப்பட்டனர். மதியம் 2 மணியளவில் விழுப்புரம் அரசு ஊழியர் நகர் என்ற இடத்தில் வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென, கலையரசியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்தார்.

வாலிபருக்கு வலைவீச்சு

உடனே அவர், திருடன்... திருடன்.... என கூச்சலிட்டார். ராமகிருஷ்ணன் மற்றும் அக்கம், பக்கத்தினர் அந்த நபரை பிடிப்பதற்குள் அவர், மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com