

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (47). அரசு போக்குவரத்து கழக நடத்துநராக பணியாற்றி வந்தார். திருவையாறு அருகே அணைக்குடி கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவுக்கு மணிகண்டன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அணைக்குடியில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த ஜெசிந்தா மேரி என்ற பெண் மீது மணிகண்டனின் பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள், மணிகண்டனை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிகண்டனை தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு பதிய வலியுறுத்தி அவரது உறவினர்கள் திருவையாறு கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.