விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் பெரம்பலூரில் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் பெரம்பலூரில் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
விபத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்காததால் பெரம்பலூரில் அரசு பஸ் ஜப்தி
Published on

விபத்தில் பெண் சாவு

தூத்துக்குடி மாவட்டம், போல்பேட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி ஜோதி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ரவிச்சந்திரன் சென்னையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ஜோதி சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக ஒரு தனியார் ஆம்னி பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூ மாவட்டம், சிறுவாச்சூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பின்னால் வந்த ஒரு அரசு விரைவு மிதவை பஸ் ஆம்னி பஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அரசு பஸ் ஜப்தி

இந்த சம்பவம் தொடர்பாக ஜோதியின் கணவர் ரவிச்சந்திரன் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ரூ.14 லட்சத்து 7 ஆயிரத்து 117 ஆயிரம் இழப்பீடாக ஜோதியின் குடும்பத்தினருக்கு வழங்க திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஜோதியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகத்தின் ஏதேனும் விரைவு மிதவை பஸ்சை ஒன்றை ஜப்தி செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை திருச்சியில் இருந்து திருப்பதி நோக்கி பயணிகளுடன் புறப்பட்டு பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த அரசு விரைவு மிதவை பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com