சங்கரன்கோவிலில் திடீரென தீப்பற்றிய அரசு பேருந்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

பேருந்து தீப்பற்றி எரிந்தபோது அப்பகுதியில் பொதுமக்கள் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீ பிடித்த பேருந்து
Published on

தென்காசி,

சங்கரன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் மற்றும் நடத்துனரில் செயலால் பேருந்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பேருந்தில் தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து இன்று திருநெல்வேலிக்கு அரசு பேருந்து புறப்பட்டுச் சென்றது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ரயில்வே கேட்டை தாண்டியபோது மின் இணைப்பு கோளாறு காரணமாக பேருந்து திடீரென தீப்பிடித்தது. பேருந்தில் இருந்து புகை மற்றும் தீ வெளியேறியதை கவனித்த ஓட்டுநர் வண்டியை உடனடியாக நிறுத்தினார். இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் இணைந்து பேருந்தில் இருந்த 60 பயணிகளையும் கீழே இறக்கி விட்டனர். அவசரம் அவசரமாக பயணிகள் இறங்கிய சிறிது நேரத்திலேயே தீ குபுகுபுவென பேருந்து முழுவதும் பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் பேருந்து முழுவதும் கருகி சேதமடைந்து விட்டது. ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் துரிதமான செயலால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தை காண பொது மக்கள் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இந்த தீ விபத்து காரணமாக சங்கரன்கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com