

தர்மபுரி:
வழித்தடம் நீட்டிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தர்மபுரி மண்டலம் சார்பில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க தொடக்கவிழா பென்னாகரம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கி நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜி.கே. மணி எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார். இதன்படி 8-ம் எண் பஸ் பென்னாகரம் முதல் ஏமனூர் வரையும், 741-டி, 742-பி ஆகிய எண்கள் கொண்ட பஸ்கள் பென்னாகரம் முதல் மேச்சேரி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டது. எண் 1, எண் 9 பஸ்கள் பென்னாகரம் முதல் நாகனம்பட்டி வரையும், 7-ம் எண் பஸ் பென்னாகரம் முதல் முதுகம்பட்டி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு ஊர்கள் வழியாக...
இதேபோல் 26 சி எண் கொண்ட பஸ் பென்னாகரம் முதல் தர்மபுரி வரையும், டி-4 எண் கொண்ட பஸ் தர்மபுரி முதல் தாசம்பட்டி வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த 6 வழித்தடங்களில் நீட்டிப்பு செய்யப்பட்ட அரசு பஸ்கள் பல்வேறு ஊர்கள் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பசேகரன், அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கவிதா, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, துணைத்தலைவர் வள்ளியம்மாள் மற்றும் போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.