

சென்னை,
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கு காலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ் போக்குவரத்து கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கியது.
ஆனாலும் அரசு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து குளிர்சாதன பஸ்களை விரைவில் தமிழகத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து பரிசீலனை செய்து வருகிற 1-ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் அரசு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதையடுத்து கடந்த மே மாதம் 10-ந்தேதிக்கு பின்னர் அரசு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படாமல் அந்தந்த அரசு பஸ் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது அரசு அறிவிப்பிற்கு பின்னர் மீண்டும் குளிர்சாதன பஸ்களை தயார் செய்யும் பணியில் போக்குவரத்து பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது மீண்டும் குளிர்சாதன பஸ்கள் இயக்க அறிவிப்பு வந்த பின்னர் போக்குவரத்து பணி மனையில் உள்ள குளிர்சாதன பஸ்களை போக்குவரத்து துறை பணியாளர்கள் தண்ணீர் மூலம் சுத்தம் செய்தும், பஸ்களில் உள்ள பயணிகளின் இருக்கைகளில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.