திருமணம் செய்வதாக ஏமாற்றிய அரசு ஊழியர்.. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு.. கடிதம் மூலம் ‘பகீர்' தகவல்கள் அம்பலம்

நகை, பணத்தையும் அபகரித்ததால் மனமுடைந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்,
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சேர்ந்தவர் அஜிகுமார். இவருடைய மனைவி ரமணி (வயது 41). பி.எஸ்.சி., பி.எட். படித்த இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஜிகுமார் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து வீட்டின் அருகில் சிறிய கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்தநிலையில் ரமணி நேற்று காலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமணி உயிரிழப்பதற்கு முன்பு எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அந்த கடிதம் மூலம் ‘பகீர்' தகவல்கள் அம்பலமானது. அதில், “எனது கணவர் இறந்த பிறகு அரசு வேலை கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கருணை மனு கொடுத்தேன். அப்போது அந்த மனுவில் இருந்த எனது செல்போன் எண்ணை எடுத்து அங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் என்னிடம் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்தார்.
ஒரு கட்டத்தில், தனக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினார். இதனை நான் கண்மூடித்தனமாக நம்பினேன். இந்த நம்பிக்கையால், அவர் என்னிடம் கேட்ட நகை மற்றும் பணத்தையும் கொடுத்தேன். சத்தியமாக உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று வாக்குறுதியும் அளித்தார். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் கடந்த மே மாதம் வேறொரு பெண்ணை மணமுடித்தார். இதனை அறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். இதுபற்றி கேட்டதால் அவர் மற்றும் அவருடைய உறவினர்கள் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் தற்கொலை முடிவை எடுக்கிறேன்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
மேலும் இதுகுறித்து ரமணியின் தந்தை ஜார்ஜ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறப்பதற்கு முன்பு ரமணி எழுதிய உருக்கமான கடிதத்தில், தன்னுடைய தந்தை, மகளிடம் மன்னிப்பு கேட்டும் எழுதியுள்ளார். அதில், “அப்பா, எனது பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் மனம் தாங்க முடியாமல் இந்த தற்கொலை முடிவை எடுக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். நான் இறந்த பிறகு என் இறப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுங்கள். மகளே, என்னை மன்னித்து விடு. உன்னை நல்ல முறையில் வளர்க்க அம்மாவுக்கு ஆசை. ஆனால் இவர்கள் என்னை தொந்தரவு செய்கிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை” என்று அதில் ரமணி தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.






