சினிமா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அடுக்குமாடி வீடுகள்: பெப்சி நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய சினிமா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவது குறித்து பெப்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு நடத்தினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடிகர்கள், தயாரிப்பாளர்கள் திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) உள்ளிட்ட திரையுலகினருக்கு பையனூரில் வீடுகள் கட்டிக்கொள்ள அரசு ஏற்கனவே நிலம் ஒதுக்கி உள்ளது. இதில் பெப்சி சார்பில் படப்பிடிப்பு அரங்கு கட்டப்பட்டு உள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒதுக்கிய இடத்தில் சொந்த வீடுகள் இல்லாத உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டித்தருமாறு பெப்சி ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்த கோரிக்கை குறித்த ஆய்வு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசு செயலாளர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் பா.முருகேஷ், ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன், அ.தி.மு.க கலைப்பிரிவு தலைவர் லியாகத் அலிகான், மற்றும் பெப்சி நிர்வாகிகள் ஸ்ரீதர், தினா, அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் ஆர்.கே.செல்வமணி நிருபரிடம் கூறும்போது, திரைப்பட தொழிலாளர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 4 ஆயிரம் பேருக்கு பையனூரில் அரசு சார்பில் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று நாங்கள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது.

இதற்கான பணிகளை உடனடியாக கவனிக்கும்படி அதிகாரிகளுக்கு துணை முதல்- அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நிலத்தை மேம்படுத்துவதற்கான செலவில் ஒரு பகுதியை அரசு தரும் என்றும், இன்னொரு பகுதியை நன்கொடை மூலம் திரட்டும்படியும் அவர் தெரிவித்து உள்ளார். எங்கள் கோரிக்கையை ஏற்ற அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com